செவ்வாயன்று ஓய்வுபெறுகிறார் நீதியரசர் சிறிபவன் – புதிய தலைமை நீதியரசர் யார்?
சிறிலங்காவின் தலைமை நீதியரசர் கே.சிறிபவன் வரும் செவ்வாய்க்கிழமையுடன் (பெப்ரவரி 28) ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதியரசராக யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அப்போதைய தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ் நீக்கப்பட்டு, கே.சிறிபவன் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
65 வயதை எட்டும் நிலையில், தலைமை நீதியரசர் , கே.சிறிபவன் நாளை மறுநாள் ஓய்வு பெறவுள்ளார். அவருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அடுத்த தலைமை நீதியரசராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது. மூப்பு அடிப்படையில்,நீதியரசர் பிரசாந்த டிப் முதலிடத்திலும், நீதியரசர் ஈவா வணசுந்தர இரண்டாவது நிலையிலும் உள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே புதிய தலைமை நீதியசரை நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.