மேலும்

சிறிலங்கா அதிபர், கூட்டமைப்புடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு

TNA-jaishangarமூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இன்று சிறிலங்கா அதிபர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகளுடன் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இன்று காலை இந்தியத் தூதரகத்தில், சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உறுதியளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமை குறித்து கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

அத்துடன், அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் ஏற்பட்டுள்ள முடக்க நிலை குறித்தும் விபரித்துக்  கூறப்பட்டுள்ளது.

TNA-jaishangarjaishangar-colombo (1)

இதுதொடர்பாக தாம் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடனான சந்திப்புகளில் கலந்துரையாடுவதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலருடன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, துணை தூதுவர் அரிந்தம் பக்ஷி மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் இந்திய வெளிவிவகாரச் செயலர் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இன்று காலை அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

எனினும், இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *