அம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க சிறிலங்கா மறுப்பு
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவின் உரிமையை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்ட போது, அதற்காக தோண்டப்பட்ட மண், மற்றும் கற்களைக் கடலில் கொட்டி ஒரு செயற்கைத் தீவு உருவாக்கப்பட்டது.
45 ஹெக்ரெயர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைத் தீவை சுற்றுலா மையமாக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்து அதற்கான உடன்பாடு குறித்துப் பேச்சு நடத்தி வருகிறது.
எனினும், அங்குள்ள செயற்கைத் தீவை தொடர்ந்தும், சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபை தனது பிடியில் வைத்திருப்பதற்கு முயற்சித்து வருகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வாங்கவுள்ள சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன், இது தொடர்பாக கடந்தவாரம், சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளது.
இந்த செயற்கைத் தீவு சீனாவின் கடன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படவில்லை என்றும் எனவே இதனை தனியார் மயப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும், துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.