பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திப்பு
பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாயட் பாஜ்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
ராவல்பிண்டியில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பேச்சுக்களில், பிராந்திய பாதுகாப்பு, மற்றும் நிபுணத்துவ நலன்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக பாகிஸ்தான் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இராணுவத்தின் அர்ப்பணிப்பையும், சாதனைகளையும், சிறிலங்கா கடற்படைத் தளபதி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டைக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் இராணுவத்தின் முயற்சிகளையும் அவர் அங்கீகரித்துள்ளார்.