அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் எமக்கு முக்கியமான ஒன்று – சீனா
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் முக்கியமானது என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் மற்றும் சட்ட ரீதியான தடைகளை சிறிலங்கா அகற்றும் வரையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1.1பில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங், “அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் முக்கியமான ஒன்று.
இது சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை செழிப்படையச் செய்யும் நோக்கத்தைக் கொண்டது.
எமக்குத் தெரிந்தவரை, இந்த திட்டம் உறுதியாக முன்னெடுக்கப்படுகிறது.
சந்தை மற்றும் வர்த்தக கொள்கைகளுக்கு ஏற்ப, சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் திட்டத்தை முன்னகர்த்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.