அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் சிறிலங்காவின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி கடந்தவாரம் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த 8ஆம் நாள் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர், அங்குள்ள பிராந்திய இராணுவத் தலைமையகங்களுக்கும் சென்று பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது. அமெரிக்கப் பாதுகாப்பு நிபுணர் ஜோன் ஹில்ஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், அதன் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவையும் சந்தித்துள்ளார்.