தப்பியோடிய 563 சிறிலங்கா படையினர் ஒரே நாளில் கைது
சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தை விட்டு தப்பிச் சென்றவர்கள் மீண்டும் படைகளில் இணைந்து கொள்வதற்கு அல்லது சட்டரீதியாக படைகளில் இருந்து விலகிக் கொள்வதற்கு, பாதுகாப்பு அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் பொதுமன்னிப்புக் காலத்தை அறிவித்திருந்தது.
2016 டிசெம்பர் 31ஆம் நாளுடன் பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 9ஆம் நாள் சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் இணைந்து, தப்பியோடிய படையினரைக் கைது செய்யும் பாரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே 563 தப்பியோடிய படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவ வரலாற்றில் தப்பியோடிய பெரும் எண்ணிக்கையான படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
அதேவேளை, பொதுமன்னிப்புக்காலம் முடிவடைந்த பின்னர், இதுவரையில் 1 அதிகாரி மற்றும் 960 தப்பியோடிய படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.