மட்டக்களப்பில் இன்று எழுக தமிழ் நிகழ்வு
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 9 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் பேரணியுடன் ஆரம்பமாகும் இந்த எழுச்சி நிகழ்வு நாவற்குடா விவேகானந்தா மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் 24ஆம் நாள் நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வின் தொடர்ச்சியாக, கிழக்கின் முதல் எழுக தமிழ் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கிழக்கின் எழுக தமிழ் நிகழ்வில், பொதுமக்களை அணிதிரட்டுவதற்கான தீவிர பரப்புரைகள் கடந்த பல நாட்களாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.