11 தமிழர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் – சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு
2008ஆம் ஆண்டில் 11 தமிழர்கள் காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு, கொழும்பு கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8ஆம் நாளுக்கும், செப்ரெம்பர் 7ஆம் நாளுக்கும் இடையில், 11 தமிழர்கள் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டனர்.
இவர்கள் வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளை வதிவிடமாகக் கொண்டவர்களாவர்.
இது தொடர்பான வழக்கு நேற்று கோட்டே நீதிமன்றத்தில் நடந்த போது, இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தையும் நீதிவான் வழங்கியுள்ளார்.
இந்த வழக்கில் சிறிலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவில் இருந்த லெப்.கொமாண்டர் நிலந்த சம்பத் முனசிங்க சந்தேக நபர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்யவுள்ளது. இதற்கே கோட்டே நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.