அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்பாடு – இந்தவாரம் இறுதி முடிவு
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்பாடு, இந்த வாரம் இறுதி செய்யப்படும் என்று குளோபல் போர்ட்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தவாரம் அமைச்சரவையில் இந்த திட்டத்தை சமர்ப்பித்து, இந்த உடன்பாட்டை இறுதிப்படுத்தவுள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவை இன்று கூடும் போது, இதுபற்றிக் கலந்துரையாடப்படவுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இந்த உடன்பாடு இறுதிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் மற்றும் கைத்தொழில் வலயத் திட்டம் என்பனவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களினால், இந்த உடன்பாடு தாமதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.