மே மாதம் சீனா செல்கிறார் ரணில்
சீனாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே மாதம், பீஜிங் செல்லவுள்ளார்.
சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திர நாளை முன்னிட்டு பீஜிங்கில் நேற்று நடந்த நிகழ்வுகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சீனாவின் “ஒரு அணை ஒரு பாதை” திட்டம் தொடர்பான உச்சி மாநாடு ஒன்று வரும் மே மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், சிறிலங்கா பிரதமரின் இந்தப் பயணத்திட்டத்தை உறுதிப்படுத்தினார்.
சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்கள் நல்லமுறையில் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், தெரிவித்த அவர், இதற்கான கால வரம்பை வெளியிட மறுத்து விட்டார்.
பேச்சுக்குழுக்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என்றும் நல்லமுறையில் பேச்சுக்கள் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.