உறவுகளை பலப்படுத்துவது இரு நாடுகளுக்கும் முக்கியம் – சிறிலங்கா அமைச்சரிடம் இந்தியத் தூதுவர்
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக அண்மையில் பதவியேற்ற தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை முதல் முறையாகச் சந்தித்து, இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் விரைவாக கையெழுத்திடுவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா நிதியமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது கருத்து வெளியிட்டுள்ள இந்தியத் தூதுவர்,
“சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் போது, தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்தப்படும்.
இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது, இரண்டு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது. சுதந்திர வர்த்தக உடன்பாட்டை தாமதமின்றி கையெழுத்திட முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த சுதந்திர வர்த்தக உடன்பாடு, சிறிலங்காவுக்கு பல்வேறு முன்னுரிமைகளை கொடுக்கும்.
சிறிலங்கா தனது பொருளாதாரத்தை முன்னேற்ற பெரும் முயற்சிகளை எடுக்கிறது. சிறிலங்காவின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவ, இந்தியா தயாராக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.