இந்திய இராணுவத் தளபதியுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி பேச்சு
ஐந்து நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இந்திய இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
புதுடெல்லியில் உள்ள இந்திய இராணுவத் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கும், சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கும் இடையில் நடந்த இந்த பேச்சுக்களின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்திய- சிறிலங்கா படைகளுக்கிடையில் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தியா சென்றிருந்தார்.
அதேவேளை, மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, சிறிலங்கா கடற்படைக்கு உதவ இந்திய கடலோரக் காவல்படை முடிவு செய்துள்ளது.
தேவையேற்படும் போது, சிறிலங்கா கடற்படைக்கு இந்த உதவியை இந்தியக் கடலோரக் காவல்படை வழங்கும்.
நேற்றுமுன்தினம் இந்திய கடலோரக் காவல்படை பணிப்பாளர் ராஜேந்திர சிங்கிற்கும், சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.