சிறிலங்கா அதிபரின் மரணத்துக்கு நாள் குறித்த சோதிடர் விஜித றோகண கைது
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மரணிக்கப் போவதாக, சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றின் மூலம் ஆரூடத்தை வெளியிட்ட சோதிடர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய்பபட்டார்.
மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 26ஆம் நாள் மரணமடைவார் என்றும், அவ்வாறு நடக்கவில்லையேல் தாம் அதன் பின்னர் ஆரூடம் கூறப் போவதில்லை என்றும் விஜித றோகண கூறியிருந்தார்.
அத்துடன், பிரதமராக மகிந்த ராஜபக்சவும், அதிபராக கோத்தாபய ராஜபக்சவும் பதவியேற்பது நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா அதிபரின் மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்ட காணொளி முகநூலில் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே இன்று மாலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதிடர் விஜித றோகணவைக் கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சோதிடர், விஜித றோகண, 1987ஆம் ஆண்டு கொழும்பில் அணிவகுப்பு மரியாதையின் போது, இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை துப்பாக்கி பிடியினால் தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விஜித றோகண, பிரேமதாச அதிபராக இருந்த போது பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.