மகிந்தவைக் கொல்ல றோவும், சிஐஏயும் முயற்சி – கம்மன்பில குற்றச்சாட்டு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவும், அமெரிக்காவும் முயற்சித்து வருவதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வின் கணிப்பின் படி, உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்தின் பலம் குறைந்துள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து அரசியலில் இருப்பதே, அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கிறது.
அவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வந்து அரசியலில் ஈடுபடுவார் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.
இதனால், மகிந்த ராஜபக்ச அரசியலை விட்டு வெளியேறினால், நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தள்ளு படி செய்வதாக இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஆனால் அதனை மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பாக சி.ஐ.ஏயும் இதில் தொடர்புபட்டுள்ளது.
தனது நாட்டின் அதிபர் என்று கூட பாராமல் ஜோன் எவ் கென்னடியை சி.ஐ.ஏ கொலை செய்திருந்தது. எனவே, அவர்களுக்கு மகிந்த ராஜபக்சவைக் கொலை செய்வது பெரிய விடயமல்ல.
மகிந்த ராஜபக்சவே ஆட்சி செய்யக் கூடிய மாற்றுத் தலைவராவார். இவரை தவிர கூட்டு எதிரணியில் செயற்பாட்டு திறன்மிக்கவர்கள் வேறு யாரும் இல்லை. கூட்டு எதிரணியில் மகிந்த ராஜபக்ச இல்லையேல் எமக்குப் பலமில்லை.
அதனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் மகிந்த ராஜபக்சவின் உயிரைப் பறிப்பதை தவிர வேறு வழிகள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.