சுவீடன் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு
சுவீடனுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோமைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஸ்ரொக்ஹோமில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயல்முறைகள், இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய விவகாரங்கள் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேசியதாக, சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார்.
சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஒருவர், கடந்த 30 ஆண்டுகளில் சுவீடனுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.