அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதம் ஒத்திவைப்பு
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக அடுத்தவாரம் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில், எதிர்வரும், 9, 10, 11ஆம் நாள்களில், உப குழுக்களின் அறிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று நடந்த புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில், இந்த விவாதத்தை பிற்போடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் இணைத்து, உபகுழுக்களின் அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதென நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.