அம்பாந்தோட்டை உடன்பாடுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹொரணவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ‘நாடாளுமன்றத்தில் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிட்ட பின்னர், அம்பாந்தோட்டை தொடர்பான எல்லா உடன்பாடுகளின் பிரதிகளையும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சமர்ப்பிப்பார்.
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்துக்கு தனியார் காணிகள் சுவீகரிக்கப்படாது. அரச காணிகள் மாத்திரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே அரச காணிகளை தொழில்களைத் தொடங்குவதற்காக வழங்குகிறோம்.
இந்தியாவிலும் தாய்லாந்திலும் உள்ளது போல, கைத்தொழில் வலயங்களுக்கான காணிகளை இனம்காண்பதற்கும், அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் அதிகாரசபை ஒன்று உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் குறிப்பிட்டார்.