புதிய போர் விமானக் கொள்வனவு குறித்து இன்னமும் முடிவு இல்லை
மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிதாக கொள்வனவு செய்யப்பட வேண்டிய பல நோக்குப் போர் விமானத்தின் தேவைப்பாடுகள் குறித்த செயல்முறைகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக, 8 தொடக்கம் 12 புதிய பலநோக்குப் போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்குக் கொள்வனவு செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
புதிய போர் விமானங்களையும் அவற்றுக்கான ஆயுதங்களின் தொகுதிகளையும், விமான உற்பத்தியாளர்களிடம் இருந்து அரசு- அரசு இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அதிபர் மற்றும் அமைச்சரவையினால் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விமானத் தேவைப்பாடுகள் இறுதிப்படுத்தப்பட்டு விட்டால், விமானங்களைக் அகாள்வனவு செய்வதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நாடுகளிடம் இருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்படும் என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும், தற்கால போர் விமானங்களே வாங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.