இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் முக்கிய பேச்சு
கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க தலைமையிலான மூன்று பேர் கொண்ட, அதிகாரிகள் குழு மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ளது.
இந்தக் குழுவினரை இந்திய கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம், ராஜேந்திர சிங் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பரஸ்பர கரிசனைக்குரிய கடல்சார் விவகாரங்கள், கூட்டு அணுகுமுறையை உருவாக்குவது தொடர்பாக இந்தப் பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு நாடுகளின் கடலோரக் காவல்படைகளுக்கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் குழுவினர், இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் ஜி.மோகன் குமாரையும் சந்தித்து, பொதுவான கடல்சார் நலன்கள் குறித்து கலந்துரையாடினர்.