மகிந்தவுக்கு ரணில் சவால்
தாம் இம்மாதம் ஒரு வாரப் பயணமாக சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், முடிந்தால், தமது அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டட்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
2017ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிப்பதே தமது இலக்கு என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
இந்த நிலையில், அலரி மாளிகையில் நேற்று நடந்த புத்தாண்டு நிகழ்வில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
“அடுத்த வாரம் நான் ஒரு வாரகாலப் பயணமாக சுவிற்சர்லாந்து செல்கிறேன். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அந்தக் காலத்தை மகிந்த ராஜபக்ச பயன்படுத்திக் கொள்ளட்டும். முடிந்தால் அவர் ஆட்சியைக் கவிழ்த்துப் பார்க்கட்டும்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதையும் கூறும் உரிமை உள்ளது. ஆனால் அவர் எதைச் சொன்னாலும், நான் தான் பிரதமர்” என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.