மேலும்

காணாமற்போனோர் செயலகம் குறித்த சட்டமூலம் – மகிந்த அணியைச் சாடும் கொழும்பு ஊடகம்

mahinda-meeting (1)மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி இழைத்த தவறினால், சிறிலங்கா அரசாங்கம் காணாமற்போனோர்  தொடர்பான பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன்  நிறைவேற்றும் நிலை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று விசனம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 95 உறுப்பினர்களில், கூட்டு எதிரணியில் 50 பேர் உள்ளனர்.

அதேவேளை இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்பதால், ஐதேக மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்தால் 122 வாக்குகள் கிடைக்கும்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு உறுப்பினர்களும், ஈபிடிபி உறுப்பினர் ஒருவரும் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர்.

எனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெறாமலேயே இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றக் கூடிய நிலை உள்ளது.

இந்தச் சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் இடம்பெற்று ஏழு நாட்களுக்குள் இதன் சட்டபூர்வ தன்மை குறித்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய கூட்டு எதி்ரணி தவறிவிட்டதாக, சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலையியல் கட்டளையின்படி, வர்த்தமானியில் இந்த சட்டமூலம் பிரசுரிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற வேண்டும்.

இந்தச் சட்டமூலத்தில் சில பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதால், இதற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்  செய்து,  மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தான் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியிருக்க முடியும் என்று சட்டத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவும் இந்தச் சட்டமூலம் படையினரைக் காட்டிக்கொடுக்கும், அவர்களைக் பழிவாங்கும் நோக்கம்  கொண்டது என்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், கூட்டு எதிரணி உயர்நீதிமன்றத்தில் இதற்குச் சவால் விடத் தவறியதால், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் விசனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *