அம்பாந்தோட்டை பொருளாதார முதலீட்டு வலய திட்டம் – சீனாவுடன் பேச்சுக்கள் ஆரம்பம்
அம்பாந்தோட்டையில் 10 பில்லியன் டொலர் பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் உற்பத்தி நிலையம், கைத்தொழில் வலயங்கள், ஆகியவற்றை உள்ளடக்கியதாக, அம்பாந்தோட்டை பொருளாதார முதலீட்டுத் திட்டம் அமைந்திருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி்வித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவின் முதலீட்டில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இந்தத் திட்டத்தை சீனாவிடம் முன்மொழிந்திருந்தார்.
இதுதொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் தற்போது பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.