நாமலுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகமாட்டேன் – மகிந்த கைவிரிப்பு
தனது மகன் நாமல் ராஜபக்சவுக்காக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாக மாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் சார்பில் நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ நான் முன்னிலையாக மாட்டேன்.
என்னுடைய மகனாக இருந்த போதிலும் அவர் ஒரு அரசியல்வாதி. பல அரசியல்வாதிகள் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்காக நான் நீதிமன்றங்களுக்கோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கோ செல்லமாட்டேன்.
அரசியல்வாதியான நாமல் ராஜபக்சவின் சார்பாக, நீதிமன்றங்களிலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முன்னிலையாகக் கூடாது என்பதே எனது கருத்து” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்றுமாலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்வையிட்டிருந்தார் மகிந்த ராஜபக்ச.
அதன் பின்னர் வெளியே வந்து, செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று சிறிலங்கா அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்க விரும்புகிறேன்.
இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. இதில் வேறொன்றும் இல்லை. முகமட் முஸம்மில் சிறைவைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இன்னும் பலர் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இப்போது இது எமக்குப் பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. இது வழக்கமான ஒன்றுதான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.