சிறிலங்கா அதிபர், பிரதமரைச் சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்
மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்று அவரது வதிவிடத்தில் சீன வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது, சிறிலங்காவில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான போரின் இறுதிக்கட்டத்தில், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா எதிர்கொண்ட நெருக்கடிகளின் போதும், சீனா வழங்கிய உதவிகளுக்கு சிறிலங்கா அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பாரம்பரிய நட்புறவு, அரசியல் நம்பிக்கை, ஆழமான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபரும், சீன வெளி்விவகார அமைச்சரும் இணக்கம் தெரிவித்தனர்.
அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இருநாடுகளின் நலன்களுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.
அத்துடன் சீனாவின் 21ஆம் நூற்றாண்டு பட்டுப்பாதைத் திட்டத்துக்கு சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்க விருப்பம் கொண்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பணிகள் தொடர்பாகவும், பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.