சீன வெளிவிவகார அமைச்சர் நாளை சிறிலங்காவுக்குப் பயணம்
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி மூன்று நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ளார். எதிர்வரும் 10ஆம் நாள் வரை அவர் கொழும்பில் தங்கியிருந்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹோங் லீ, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை, சீன வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சீன அரசின் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முக்கிய பயணம் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தவும், பிரதான திட்டங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும, இணக்கம் காணப்பட்டது.
இந்த முக்கிய இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கும், கொள்கை, முதலீடு, உற்பத்தி ஆற்றல், ஆகியவற்றில் மேலதிக ஒத்துழைப்புக்கான வாய்ப்பாக, இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் சீனா விரும்புகிறது என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.