லசந்த படுகொலை – சந்தேக நபர்களின் படங்களை மீண்டும் வெளியிட்டது சிறிலங்கா காவல்துறை
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்களை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது, அதனை நேரில் கண்ட சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், இரண்டு சந்தேகநபர்களின் மாதிரிப் படங்கள், வரையப்பட்டுள்ளன.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க முதலாவது நபர், 05 அடி 08 அங்குல உயரம் கொண்டவர் என்றும், கூறப்பட்டுள்ளது. பொதுநிறமுடைய அவரது கண்கள் கபில நிறமானவை.
இரண்டாவது படத்தில் இருப்பவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர். சுமார் 05 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர். சற்று பருமனாகவும் கறுப்புநிற மேனியையும் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்படி நபர்கள் தொடர்பான தகவல்கள் தெரிய வந்தால், தகவல் வழங்குமாறும், சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்தக் கொலைவழக்கில் சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்கள் சிறிலங்கா காவல்துறையினால் வெளியிடப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டதையடுத்து, அதில் உள்ள ஒருவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கப்டன் திஸ்ஸ விமரவீரவின் படத்துடன் ஒத்துப் போவதாக செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவம் தொடர்பாக கப்டன் திஸ்ஸ கைது செய்யப்பட்டு இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும், அந்த மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.