10 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகினர்
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் தாமாக முன்வந்து இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகியுள்ளனர்.
முப்படைகளில் இருந்தும் தப்பியோடியவர்கள் சட்டரீதியாக விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலத்தை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 12ஆம் நாள் ஆரம்பமாகிய இந்த பொதுமன்னிப்புக் காலம், இம்மாதம் 12ஆம் நாள் வரை நீடிக்கும் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து முறைப்படி விடுமுறை பெறாமல் தப்பியோடிய, 10,417 பேர் நேற்று வரை, தமது படைப்பிரிவுகளில் முன்னிலையாகி சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மேலும் சுமார் 15 ஆயிரம் வரையான தப்பியோடிய படையினர் மறைந்து வாழ்வதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.