புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான கலையரசனும் கைது
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான கலையரசனும், நேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருக்கோவில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து, புலிகளின் முன்னாள் தளபதி ராம் கைது செய்யப்பட்டதையடுத்தே, கலையரசன் நேற்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும், நெருக்கமானவர்கள் என்றும், அரசபடைகள் மற்றும் சிறிலங்கா காவல்துறை மீதான பல்வேறு தாக்குதல்களில் இவர்கள் ஈடுபட்டவர்கள் என்றும் தீவிரவாத விசாரணைப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என்றும் சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, போரின் இறுதி நாட்களில், கிழக்கில் ராமுடன் இணைந்து செயற்பட்ட புலிகளின் முன்னாள் தளபதி நகுலனும் நேற்று கோப்பாயில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.