தனி அரசை நிறுவ கூட்டமைப்பும், தமிழ் அரசுக் கட்சியும் முயற்சி- உயர்நீதிமன்றில் மனு
சிறிலங்காவில் தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவாளர் அனுர லக்சிறியினால் நேற்றுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், இதுதொடர்பாக விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், மாகாணசபையின் செயலாளர் பத்திநாதன் ஆகியோர், இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணசபையில் கட்ந்த 7ஆம் நாள் முதலமைச்சர் சமர்ப்பித்த பிரேரணையில், வடக்கு, கிழக்கில் தமிழ்ப்பேசும் மக்களுக்கு தனியான அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சமஸ்டி ஆட்சிமுறையில் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த பிரேரணை கடந்த 22ஆம் நாள் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையிலேயே, அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனி அரசு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அரசியலமைப்பை மீறிச் செயற்படும் இவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
வடமாகாணசபையின் தீர்மானத்தின் சிங்கள மொழிப் பிரதியைச் சமர்ப்பிக்குமாறு மாகாணசபை செயலாளரைப் பணிக்கும்படியும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.