சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இராணுவத்துக்கு முக்கிய பங்கு உண்டு – பிரித்தானியா
நீண்டகாலப் பிரச்சினைகளாக உள்ள நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில், நாட்டின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், சிறிலங்கா இராணுவத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அமைதியான, செழிப்பான, ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பும், சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிக்கு பிரித்தானியா ஆதரவு அளிக்கும் என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான வதிவிடமற்ற தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, கப்டன் ஸ்ருவார்ட்போர்லன்ட், மற்றும், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் அழைப்பின் பேரில் கப்டன் போர்லன்ட் மற்றும், பிரதித் தூதுவர் லோறா டேவிஸ் ஆகியோர், திருகோணமலை கடற்படைப் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றிருந்தனர்.
கொழும்பில், கப்டன் போர்லன்ட், சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர், ஜேம்ஸ் டோரிசுடன் இணைந்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
கப்டன் போர்லன்ட், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின், அனைத்துலக இராணுவ கொள்கை மற்றும் திட்டமிடல், பிரிவின் பிரதித் தலைவர் பற்றீசியா பார்க்கின் தலைமையிலான குழுவுடன் இணைந்து, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, சிவில் சமூகம், இராஜதந்திர சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.