36 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் அமைச்சரின் கையில் சிறிலங்கா காவல்துறை திணைக்களம்
சிறிலங்காவில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில், காவல்துறைத் திணைக்களம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இதையடுத்தே, காவல்துறை திணைக்களம், அமைச்சர் சுவாமிநாதனின் தற்காலிக கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு இவரிடம் இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியில் இருந்த போது, 1980ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் நாள், உள்நாட்டலுவல்கள் அமைச்சராக, கே.டபிள்யூ தேவநாயகத்தை நியமித்திருந்தார்.
அப்போது, காவல்துறை திணைக்களம், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வந்தது.
அதற்குப் பின்னர், காவல்துறை திணைக்களத்தை கட்டுப்படுத்தும் அமைச்சு எதுவும் கடந்த 36 ஆண்டுகளில் தமிழர் எவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க வெளிநாடு சென்றிருப்பதாலேயே, தற்காலிகமாக காவல்துறை திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வசம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.