மேலும்

மேதினப் பேரணி – மகிந்த குறித்து மைத்திரி இறுதி முடிவு

Mahinda Samarasingheகாலியில் நடக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினப் பேரணியில், பங்கேற்காத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

கொழும்பில் இன்று நடத்திய ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், மேதினப் பேரணியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே கூட்டு எதிரணியினர் நடத்திய ஹைட்பார்க் கூட்டத்தில், பங்கேற்கும் சுதந்திரக் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

கட்சியின் மீதான அன்பினால் தான் அவர்கள் மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க பதிலளித்தார்.

“அவர்களைத் தண்டிக்கவில்லை என்பதை பலவீனமாக எடுக்கக் கூடாது. இம்முறை நிலைமைகள் வித்தியாசமானது.

கிருலப்பனையில் கூட்டு எதிரணியினரின் மேதினப் பேரணியில் பங்கேற்பவர்கள் மீது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.

இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்குபற்றினால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபற்றிய இறுதி முடிவு சிறிலங்கா அதிபராலேயே எடுக்கப்படும். ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் அதிபர். அத்துடன் கட்சியின் போசகரும் கூட” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *