அமைச்சர்கள் மாற்றம் குறித்து கவனமாக ஆராய்ந்த பின்னரே முடிவு – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக மிகக் கவனமாக ஆராயப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை அமைக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி, வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவொன்று வட மாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர், இதுபற்றிய முடிவெடுப்பதற்கு முன்னதாக, கவனமாக ஆலோசிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமது பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட அமைச்சர் ஒருவரைப் பதவியில் இருந்து நீக்குவது நியாயமற்றது என்றும், அதேவேளை, மாகாணத்துக்கு நிறையவே பணியாற்றக் கூடிய ஆற்றலுடையவர்களை உள்ளீர்க்காததும், நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமும், வடமாகாணசபை அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவைச் சமர்ப்பித்த மாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன், இது அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும், 13ஆவது திருத்தச்சட்டத்தின் குறைபாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.