இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய தளபதி இந்திய அமைதிப்படையினருக்கு அஞ்சலி
இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளார். நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த, இந்தியக் கடற்படையின் சுஜாதா, திர் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் வருண ஆகிய கப்பல்களின் அணியுடனேயே இவர் சிறிலங்கா வந்துள்ளார்.
வைஸ் அட்மிரல் கிரிஷ் லுத்ரா நேற்று பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது சிறிலங்கா கடற்படை அதிகாரிகள், கொழுமு்பு வந்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.