அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் – வாய்திறக்க சிறிலங்கா தயக்கம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.
நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள்-2015 என்ற அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜேதான் கெரி கடந்த 13ஆம் நாள் வெளியிட்டிருந்தார்.
அதில் சிறிலங்கா தொடர்பான பகுதியில், பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், இந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, அதுபற்றிய சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்து வெளியிடப்படும் என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் சிறிலங்கா இராணுவம் தொடர்பான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளரிடம் கருத்துக் கேட்ட போது, அவரும், முழுமையாக அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் வரும் 18ஆம் நாளே பதிலளிப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.