பசுபிக் தீவில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா
சிறிலங்கா கடற்படையினருக்கு, வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில், அமெரிக்க கடற்படையினர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
பசுபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்திலேயே, சிறிலங்கா கடற்படையினருக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை 75 சார்பில் இந்தப் பயிற்சிகள் அளி்க்கப்பட்டு வருகின்றன.
குவாம் கடற்படைத் தளத்தில், வைத்து இந்த மாத முதல் வாரத்தில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நடமாடும் பிரிவினால், பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சியின் மற்றொரு கட்டமாக, சிறிலங்கா கடற்படையினருக்கு, நேற்று முன்தினம் குவாம் தீவில் உள்ள அப்ரா துறைமுகத்துக்கு அப்பால் கடலுக்குள் சுழியோடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பானியக் கப்பல் ஒன்றின் சிதைவுகளுக்கு அருகே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா கடற்படையினருக்கு, அமெரிக்கா பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.