சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம் – ஒன்பது பேர் இதுவரை கைது
சாவகச்சேரி, மறவன்புலவில் கடந்த மாத இறுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை, ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
வெடிபொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரமேஸ் எனப்படும், எட்வேர்ட் ஜூலியனுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த ஐந்து பேர் ஏற்கனவே தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரமேசுடன், அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகளைப் பேணியவர்கள் என்று கூறப்படுகிறது. பிரதான சந்தேக நபரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.