தலைமன்னார்- இராமேஸ்வரம் பாலம் குறித்து விரைவில் உடன்பாடு – நிதின் கட்கரி
தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இந்தியாவும் சிறிலங்காவில் விரைவில் உடன்பாடு ஒன்றுக்கு வரும் என இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சங்கத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த திட்டம் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்னமும் இறுதியாகவில்லை.
இந்த விடயம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா தரப்பும் இந்த விடயத்தில் ஆர்வத்துடன் உள்ளது.” என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான விவகாரம் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு கடந்த மார்ச் மாதம் 23ஆம் நாள் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த திட்டம் தொடர்பான இந்தியாவுடன் எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.