சிறிலங்கா- சீனப் பிரதமர்கள் சந்திப்பு – 500 மில்லியன் யுவான் கொடை வழங்குகிறது சீனா
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீனப் பிரதமர் லி கெகியாங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களின் போது, கொழும்புத் துறை முக நகரத் திட்டத்தை விரைவுபடுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், சிறிலங்காவுக்கு 500 மில்லியன் யுவான் (77 மில்லியன் டொலர்) கொடையை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு பீஜிங் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுக் காலை சீனத் தலைவர்களுடனான பேச்சுக்களை ஆரம்பித்தார்.
இதன் ஒரு கட்டமாக, சீனப் பிரதமர் லி கெகியாங்கை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமருக்கு, சீன முப்படையினரதும், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்களில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு இரண்டு நாடுகளின் பிரதமர்களும் விருப்பத்தை வெளியிட்டனர்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தவும், இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்காவுக்கு 500 மில்லியன் யுவான்களை (77 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கவும் சீனா முன்வந்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏழு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டுள்ளன.