வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார் பீரிஸ்- இன்று விசாரணைக்கு அழைப்பு
சாவகச்சேரியில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், மறுநாள் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் அவர் அது குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த வெடிபொருட்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவை என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக ஜி.எல்.பீரிசிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
“இந்த விவகாரம் தொடர்பாக பீரிஸ் நன்றாக அறிந்திருக்கிறார் என்று தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியும் அதனை ஒப்புக் கொண்டார். ஜி.எல்.பீரிசிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு வருமாறு, ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம், சாவகச்சேரி சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கான ஆதாரங்கள் கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது