திடீர் மின்வெட்டினால் இருளில் சிக்கிய சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உரையாற்றிக் கொண்டிருந்த போது, மின்வெட்டு ஏற்பட்டதால், இருளில் தனது உரையை தொடர வேண்டிய நிலைக்கு உள்ளானார். இந்தச் சம்பவம் நேற்று, வடமேல் மாகாணசபையில் இடம்பெற்றது.
வடமேல் மாகாண சுகாதார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட, மருத்துவ விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் வடமேல் மாகாணசபை அரங்கில் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் அரை மணிநேரம் மின்வெட்டு தொடர்ந்தது.
மின்வெட்டு ஏற்பட்டதையடுத்து, மாகாணசபை அரங்கு இருளில் மூழ்கியது. அங்கிருந்த அவசர நிலைப் பயன்பாட்டுக்கான மின்பிறப்பாக்கியும் இயங்க மறுத்தது.
இதனால் சிறிலங்கா அதிபர் தனது உரையை இருளிலேயே நிகழ்த்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர், கைஒளிபாய்ச்சி (ரோச்) வெளிச்சத்தில், அவருக்கு நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.
சிறிலங்காவில், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல பகுதிகளில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.