சிறிலங்காவில் கால்வைக்கிறது இந்தியாவின் எக்சிம் வங்கி
இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) சிறிலங்காவில் விரைவில் கிளை ஒன்றை திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் எக்சிம் வங்கி, இந்த மாத துவக்கத்தில் பங்களாதேசில் கிளை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதையடுத்து சிறிலங்காவில் அடுத்த கிளையை திறக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேபாளம், சீனா, ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளிலும் கிளைகளை ஆரம்பிக்கும் முயற்சியில், இந்தியாவின் எக்சிம் வங்கி ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே வொசிங்டன், லண்டன், சிங்கப்பூர், யங்கூன், அடிஸ்அபாபா, ஜெகானெஸ்பேர்க் நகரங்களில், இந்தியாவின் எக்சிம் வங்கியின் கிளைகள் இயங்குகின்றன.
சிறிலங்காவில் புதிய கிளையை அமைப்பதற்கான ஒப்புதலுக்கு காத்திருப்பதாக இந்தியாவின் எக்சிம் வங்கியின் தலைவர் யதுவேந்திர மாத்தூர் தெரிவித்துள்ளார்.