தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் சிங்களத் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்- ஞானசார தேரர்
தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
”தமது சொந்த இன மக்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் பார்த்து, சிங்கள அரசியல் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எப்போதுமே தமது இன மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே முயற்சிக்கின்றனர்.
ஆனால், சிங்கள அரசியல் தலைவர்களோ, தமது இன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் உள்ள சிங்களக் கிராமங்களின் தேவைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை.
போரினால் இடம்பெயர்ந்த அனைவருக்கும், எந்த பாகுபாடுமின்றி, சமமான வசதிகளைச் செய்து கொடுப்பதில், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், கவனம் செலுத்த வேண்டும்.
அங்குள்ள சிங்கள மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அவர்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.