காலிமுகத்திடல் ஓட்டப் பந்தயத்தில் தடுக்கி விழுந்தார் பிரான்ஸ் தூதுவர்
கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடந்த பாரம்பரிய கனொன்போல் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பி்ரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ, கால் இடறிக் கீழே விழுந்தார்.
காலிமுகத் திடலில் ஆண்டு தோறும் கனொன்போல் ஓட்டம் என்ற ஓட்டப்பந்தயம் இடம்பெற்று வருகிறது.
1845ஆம் ஆண்டு பிரித்தானியப் படையினரால் சுடப்பட்ட 30 இறாத்தல் எடைகொண்ட பீரங்கிக் குண்டு ஒன்று, தவறுதலாக, தற்போது கோல்பேஸ் விடுதி இயங்கும் கட்டடத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, இந்த ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கனொன் போல் ஓட்டப்பந்தயம் நேற்று காலிமுகத்திடலில் நடந்த போது, பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ, மற்றும் ஜேர்மனி தூதுவர் ஜேர்கன் மோர்ஹாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஓடிக் கொண்டிருந்த போது, பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ, திடீரெனக் கால் தடுக்கி நிலத்தில் விழுந்தார்.
எனினும், உடனடியாகவே எழுந்து அவர் ஓட்டப் பந்தயத்தை நிறைவு செய்தார். எனினும், இந்த ஓட்டப் பந்தயத்தில் ஜேர்மனி தூதுவர் ஜேர்கன் மோர்ஹாட்டே வெற்றி பெற்றார்.