எட்கா உடன்பாட்டு வரைவை இன்னமும் ஆராய்கிறது இந்தியா
சிறிலங்காவுடன் செய்து கொள்ளவுள்ள எட்கா எனப்படும் விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டின் வரைவை இந்தியா இன்னமும் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் இதற்குப் பதில் அளிக்கப்படும் என்றும் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்ற செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, “கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது தான் இந்த உடன்பாட்டை முன்மொழிந்திருந்தார்.
இந்த உடன்பாட்டின் மேலோட்டமான வரைவை மட்டும் தான் இந்தியா வழங்கியது. இதுதொடர்பான முறையான பேச்சுக்கள் இன்னமும் தொடங்கவில்லை.
ஆனால் சிறிலங்காவில் உள்ள எதிர்க்கட்சிகள், இந்த உடன்பாடு சிறிலங்காவுக்கு நன்மை தராது என்கின்றன.
சிறிலங்காவுடன் எந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதானாலும், அது இரண்டு நாட்டு மக்களுக்கும் நன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா உறுதிப்படுத்தும்.
சாத்தியமான எல்லா வழிகளிலும். சிறிலங்காவுக்கு உதவ இந்தியா தயாராகவே உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.