ஒரேவிதமாக வெடித்த மின்மாற்றிகள் – கிளம்பும் சந்தேகங்கள்
பியகமவில் உள்ள உபமின் நிலையத்தின் மின்மாற்றியில் கடந்தவாரம் ஏற்பட்ட வெடிப்புக்கும், கொட்டுகொட உப மின் நிலைய மின்மாற்றியில் நேற்று ஏற்பட்ட வெடிப்புக்கும் இடையில் ஒற்றுமைகள் காணப்படுவதாக சிறிலங்கா மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு மின்மாற்றிகளிலும், மர்மமான முறையில் வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து மின்விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா மின்சக்தி அமைச்சின் செயலர், சுரேன் பட்டகொட, இரண்டு மின்மாற்றிகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குமான காரணம் குறித்து பொறியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பியகம, கொட்டுகொட உபமின்நிலையங்களுக்குள் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் இந்த இரண்டு மின்மாற்றிகளிலும் எவ்வாறு ஒரே விதமான வெடிப்பு ஏற்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வெடிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பது மர்மமாகவே இருப்பதாக இந்த துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம்மிக்க பொறியாளர்கள், தெரிவித்தனர்.
உலகின் வேறெங்கும் இதுபோன்று மின்மாற்றிகளில் வெடிப்பு ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பழுதடைந்த மின்மாற்றிகளை திருத்தும் பணிகள் முடியும் வரை, நீர்கொழும்பு பிரதேசத்தில் மின்தடை ஏற்படும் என்றும் சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் வெடிப்பு ஏற்பட்ட கொட்டுகொட உபமின்நிலையத்துக்கு சிறிலங்கா விமானப்படையினர் பாதுகாப்பு வழங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.