சிறிலங்காவில் அமெரிக்க விமானப்படை உயர்அதிகாரி
அமெரிக்க விமானப்படையின் பசுபிக் விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹவாயில் உள்ள பேர்ள் துறைமுக பசுபிக் விமானப்படைகளின் உதவித் தளபதியின் அணிதிரட்டல் உதவியாளரான மேஜர் ஜெனரல் ஏபெல் பரியென்ரெஸ் என்ற உயர் அதிகாரியே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் நேற்று சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தலைமை அதிகாரி எயர்வைஸ் மார்ஷல் குருசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
குவைத்தை மீட்க ஈராக் மீது 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலைவனப் புயல் மற்றும் 2003ஆம் ஆண்டு ஈராக் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை அணிகளை இவர் வழி நடத்தியவராவார்.
எனினும், இவரது சிறிலங்கா பயணத்துக்கான காரணம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.