மேலும்

சீபாவில் கையெழுத்திட மறுத்ததால் இந்தியாவே மகிந்தவைத் தோற்கடித்து – விமல் வீரவன்ச

vimal-weerawansaசீபா உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க இந்தியா வெளிப்படையாகவும், இரகசியமாகவும், பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணி்யின் தலைவர் விமல் வீரவன்ச.

கொழும்பில் ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிறுவகத்தில், “எட்கா மரணப் பொறியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற தொனிப்பொருளில் நடந்த கருத்தரங்கில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தனது பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதற்கு இந்தியா உதவியது.

இப்போது அவர்கள் சீபாவை, எட்கா என்று மாற்றியுள்ளனர். தமது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்காக இங்கு கைப்பொம்மை அரசாங்கம் ஒன்றை இந்தியா உருவாக்கி வைத்துள்ளது.

இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களை எதிரணிக்கு கொண்டு செல்வதற்காக முழு நேரமாக பணியாற்றியது.

சந்திரிகா ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினால், எமக்கு என்ன பலன் கிடைத்தது?

பெருமளவில் இந்தியாவின் ஏற்றுமதிகள் அதிகரித்தன. இந்தியாவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமறதி சிறியளவில் தான் அதிகரித்தது.இந்தியர்களே அதனையும் ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டினர்.

உலர்ந்த பாக்கு, பாம் எண்ணெய், பழைய இரும்பு போன்றவற்றைத் தான் இந்தயாவுக்கு ஏற்றுமதி செய்தோம். இந்த தொழில்களின் உரிமையாளர்கள் இலங்கையர்களல்ல, இந்தியர்கள் தான்.

இந்தியாவுக்கு தடையின்றி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்ட பல பொருட்களை எம்மால் அனுப்ப முடியாது. கழுதை இறைச்சியும் அவ்வாறு அனுமதிக்கப்பட்ட ஒரு பொருள்தான். ஆனால், கழுதை இறைச்சி்யை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *