கொழும்பில் இன்று மகிந்த அணியினர் பலப்பரீட்சை
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பீடங்கள் எச்சரித்துள்ள நிலையில், பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று மகிந்த ஆதரவு அணியினர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
எனினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தமது கட்சியின் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.
அதேவேளை, இந்தப் பேரணி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ , சிறிலங்கா அதிபருக்கோ எதிரானது அல்ல என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கே எதிரானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஐதேக அரசாங்கத்துக்கு எதிராகவே இந்தப் பேரணி இடம்பெறும் என்றும், சிறிலங்கா அதிபரையோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளையோ விமர்சிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டாலும் இன்றைய கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜேவிபியும் உண்மையான எதிர்க்கட்சிகள் அல்ல என்றும், அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் தாளத்துக்கு ஆடுகிறார்கள் என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டினார்.